சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் |
ஏழாம் திருமுறை |
7.50 திருப்புனவாயில் பண் - பழம்பஞ்சுரம் |
சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.
|
1 |
கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே.
|
2 |
தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும்
நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராயப்
புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே.
|
3 |
வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும்
பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல்
கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.
|
4 |
நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும்
நல்லான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டுபோய்ப்
புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.
|
5 |
மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.
|
6 |
ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்
பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே.
|
7 |
கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.
|
8 |
எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.
|
9 |
பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |